வியாழன், அக்டோபர் 21, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 5

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
தான் செய்வது ஒரு திருட்டு என்பதையும், தவறு என்பதையும் அறியாத கொலம்பஸ், தூணிலிருந்து படகை முற்று முழுதாக விடுவித்ததும், காற்று வீசிய திசையை நோக்கிப் படகானது நீரைக் கிழித்துக்கொண்டு நகர ஆரம்பித்தது. அவன் கையிலிருந்த துடுப்பை உபயோகிக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. அந்த அளவிற்கு வேகமாக படகு பயணத்தைத் தொடர்ந்தது. கொலம்பஸ் தன் கையிலிருந்த துடுப்பைப் படகின் ஓரமாக வைத்தான். காற்று வீசும் வேகத்திற்கேற்ப படகும் அலைகளில் ஆடி, ஆடித் தன் பயணத்தைத் தொடர்ந்தது. அவனுக்கோ அளவிடமுடியாத மகிழ்ச்சி. அவனிடமிருந்து மெல்ல, மெல்ல விடைபெறும் கடற்கரையையும், அவனைக் கைநீட்டி வரவேற்கும் 'பல்மாரியா' தீவையும் மாறி, மாறிப் பார்த்தான். அவனுக்குள் ஒரு பெருமித உணர்வு. இந்த இனிய தருணத்தைக் கொண்டாடத் தன் நண்பன் 'அன்டோனியோ' அருகில் இல்லாததை நினைத்தான். இந்த உற்சாகப் பயணத்தில் பங்கு கொள்ளாமல், 'பயந்தாங்கொள்ளியாக' ஓடிப்போய்விட்ட தன் நண்பனை நினைக்கையில் ஒருபக்கம் சிரிப்பும், மறுபக்கம் 'பரிதாப உணர்வும்' அவனுக்கு ஏற்பட்டன.

படகானது ராட்சதப் பேரலைகளுக்கு நடுவே, மிதந்து சென்றுகொண்டிருந்தது. இடையிடையே தன் கையிலிருந்த துடுப்பால் வலித்துக் கொண்டான். அவனது மகிழ்ச்சி நீண்டநேரம் நிலைக்கவில்லை. படகானது இப்போது அவன் எதிர்பார்த்த 'பல்மாரியா' தீவு இருக்கும் திசையில் செல்லாமல், எதிர்ப்பக்கமாக உள்ள 'லிகுரியான்' பெருங்கடலை நோக்கிச் சென்றது. அவன் பலங்கொண்டமட்டும் துடுப்பால் வலித்துப் படகைத் தான் விரும்பிய திசைக்குச் செலுத்த முயற்சித்தான். அந்தகோ! பெருங்காற்றுடன், மோதிய ராட்சதப் பேரலைகளுடன், பத்து வயதுச் சிறுவனால் போரிடமுடியுமா என்ன? அவன் நினைத்ததற்கு மாறாகவே சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. படகை தனது விருப்பபடி தீவை நோக்கியோ, அல்லது தான் புறப்பட்ட கடற்கரை நோக்கியோ திருப்புவது நடவாத காரியம் என்பதைக் கொலம்பஸ் உணர்ந்து கொள்வதற்கு வெகுநேரம் எடுத்தது. ஆனால் அதை அவன் உணர்ந்து கொள்வதற்கிடையில் அவனது சிறிய படகு பெருங்கடலின் எதிர்முனையிலுள்ள 'பிரெஞ்சுக்' கடற்பகுதிக்கு வந்துவிட்டது.

அவன் தான் எடுத்து வந்திருந்த சிறிய பாய்மரமும், பாயும் தனது பயணத்திற்கு முற்றிலும் உதவாத பொருட்கள் என்பதை அப்போதுதான் உணர்ந்துகொண்டான். அலைகள் கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கின. இப்போது வானம் கறுக்கத் தொடங்கியிருந்தது, மழைபெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அவனைப் பசியும், தாகமும், கூடவே அவன் வாழ்வில் 'முதற்தடவையாகப்' பயமும் பற்றிக்கொள்ள ஆரம்பித்தன. படகானது பேரலைகளால் அலைக்கழிக்கப்பட்டு இங்கும், அங்குமாக சென்றுகொண்டிருந்தது. இப்போது அவனுக்குத் தனது அன்னையின், சகோதரர்களின் நினைவு எழுந்தது. கூடவே, கடற்கரைக்குச் செல்வதைக் கண்டிக்கும் அவனது தந்தையின் நினைவும் வந்து பயமுறுத்தியது.
இப்போது மழையும் பெய்ய ஆரம்பித்திருந்தது. அவன் தெப்பமாக நனைந்துவிட்டான். இப்போது கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவனுக்குக் கடலே காட்சியளித்தது. மிகத்துணிவோடு பயணத்தை ஆரம்பித்தவனை, வானின் கருமை நிறமும், ராட்சதப் பேரலைகளும், திசைதெரியாமல் அலையும் அவனது சிறிய படகும் பயமுறுத்த ஆரம்பித்தன. தன்னைக் காப்பாற்றுவதற்கு எங்கிருந்தாவது ஒரு படகு வராதா? என்று எண்ணி ஏங்கத் தொடங்கினான்.

இரண்டு மணிநேரத் தவிப்பின் பின்னர், அவனது எதிர்பார்ப்பு வீண்போகாத வண்ணம், 'பிரெஞ்சுக்' கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு, கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த 'மொனாக்கோ' நாட்டு மீனவர்கள், நடுக்கடலில் தன்னந் தனியாக அலைந்து கொண்டிருக்கும், இச்சிறுவனின், மிகச்சிறிய படகை நோக்கித் தமது படகைத் திருப்பி வந்தனர்.
அவர்களது படகு கொலம்பஸின் படகை அண்மித்ததும், படகிலிருந்தவர்கள் தாங்கள் கண்ட காட்சியால் திகைப்படைந்தனர். தனியொரு சிறுவன், சிறிய படகில் குளிரால் விறைத்து, நடுங்கிய வண்ணம், அலைகளின் இழுப்பிற்கேற்ப அலைந்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் சத்தமாக அவனை நோக்கிக் குரலெழுப்பு முன்னரே சிறிய படகிலிருந்து, அவர்களை நோக்கி பின்வரும் வாசகங்கள் அலைகள் ஊடாக மிதந்து வந்தன. "எனது பெயர் கொலம்பஸ், நான் கிறிஸ்தோபர் குடும்பத்தைச் சேர்ந்தவன், நான் ஜெனோவா நாட்டில் 'போட்டோ அண்டிகோ' கிராமத்தைச் சேந்தவன், நான் ஆபத்தில் இருக்கிறேன், எனக்கு உதவுங்கள்"
(அடுத்த வாரமும் தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக