வியாழன், ஜூலை 14, 2011

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு - அத்தியாயம் 21

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்

காதலும் கத்தரிக்காயும்

"இன்று சமையல் பிரச்சனையைப் பற்றிப் பேசுவதை விட்டு, ஒரு சமுதாயப் பிரச்சனையைப் பற்றி உங்களிடம் கேட்கப் போகிறேன்" என்றேன் நான். "சமுதாயப் பிரச்சனையை அலசி ஆராய்வதற்கு நான் ஒன்றும் 'சமூக ஆய்வாளர்' அல்லவே? என்றார் திரு.பழனிச்சாமி அவர்கள். "இருந்தாலும் நான் உங்களை விடப்போவதில்லை, உங்கள் தமிழ்நாட்டிலாகட்டும், இலங்கையில் தமிழ்ப் பகுதியிலாகட்டும் காதலை ஏன் கத்தரிக்காயுடன் சம்பந்தப் படுத்துகிறார்கள்? "அடடா நீங்கள் எதைப்பற்றிக் கூற வருகிறீர்கள் என்று புரிகிறது" என்றார் மெதுவாகச் சிரித்தபடி. "உண்மையில் உங்களுக்குத் தெரிந்ததைக் கூறுங்கள். காதலுக்கும், கத்தரிக்காய்க்கும் என்ன சமபந்தம்? ஏன் எதற்கெடுத்தாலும் இலங்கைத் தமிழில் "கண்டறியாத காதலும் கத்தரிக்காயும்" எனவும், தமிழ்நாட்டுத் தமிழில் "காதலாவது கத்தரிக்காயாவது" என்று கூறுகிறார்கள். இது சாதாரண 'எதுகை மோனைக்காகக்' கூறப்படுகிறதா? அல்லது காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் உண்மையிலேயே ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? என்று கேள்விகளை அடுக்கினேன். "ஐயையோ என்னை விட்டுவிடுங்கள், சத்தியமாக எனக்குத் தெரியாது". என்றார் மீண்டும் சிரித்தபடி. பின்னர் மெதுவாக அவரே ஆரம்பித்தார் "நான் நினைக்கிறேன், இது காதலைக் கொச்சைப் படுத்துவதற்காக தமிழர்கள் கண்டுபிடித்த ஒரு 'சொல்லடை' என்று நினைக்கிறேன், நான் கூறுவது தவறாகக் கூட இருக்கலாம். இருப்பினும் ஒருவர் கூறும் கருத்தை மறுதலிப்பதற்காக 'மண்ணாங்கட்டி' என்ற வார்த்தையை சிலர் உபயோகிப்பதைப் பார்த்திருப்பீர்கள், அதுபோலத்தான் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன். இருப்பினும் எல்லாவற்றிற்கும் பதில் கூறுவதற்குத்தானே 'இணையத் தளங்கள்' வந்துவிட்டன, இணையத் தளங்களில் தேடுங்கள், "தேடுங்கள் கண்டடைவீர்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகள் நினைவிருக்கட்டும். கிடைக்கும் விடையை என்னோடும், உங்கள் வாசகர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள் என்றார் அவர்.

அவர் கூறியபடியே பல தமிழ் இணையத் தளங்களில் கடுமையாக முயற்சிசெய்து தேடியதில் ஒரேயொரு தமிழ் இணையத்தில் மட்டும் என் கேள்விக்கான விடை கிடைத்தது. எனது கேள்விக்கு ஏற்ற பதிலை விளக்கமாகத் தனது இணையப் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார் ஓய்வுபெற்ற விவசாய விஞ்ஞானியான முனைவர்.P.கந்தசாமி அவர்கள். அதுமட்டுமல்லாமல் மேற்படி தனது விளக்கத்தை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் அனுமதியை வழங்கியுள்ளார்.

உங்களுக்கு நன்றி ஐயா. !

###############################################################


"காதலாவது கத்தரிக்காயாவது" என்று காதலில் விழுந்த கதாநாயகியைப் பார்த்து தந்தை கேட்பாரென்று பல கதைகளில் படித்திருக்கிறோம். சினிமாவிலும் பார்த்திருக்கிறோம். கத்தரிக்காய் இரண்டு நாளில் வாடி வதங்கிப்போவது போல காதலும் சீக்கிரம் வாடி விடும் என்பதுதான் காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் உள்ள ஒற்றுமை.


இன்றும் கூட என்னைப்போன்ற 'கிழடுகள்' அந்த அபிப்ராயத்தைத்தான் கொண்டிருக்கிறோம். 'பத்தாம்பசலி' என்று எங்களைப் போன்றவர்களை ஏளனமாகக் கூறுவார்கள். நாங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் 'பழைய பஞ்சாங்கத்தையே' பாடிக்கொண்டிருப்போம்.

காதல் கல்யாணம் நன்மையா, தீமையா? என்று பட்டி மன்றம் நடத்தினால் ஆயுளுக்கும் நடத்தலாம். ஒவ்வொருவரும் அந்தப் பட்டி மன்றத்தில் ஒவ்வொரு கருத்து கூறமுடியும். ஆனால் இன்று உலகத்தில் நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். செய்தித்தாள்களில் வருவதுதான் இன்றைய உலக நடைமுறை.

"காதலித்தவன் என்னைக் கெடுத்துவிட்டு, கைவிட்டுவிட்டான்" என்று போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும், கலெக்டர் ஆபீசுக்கும் அலைபவர்கள் எத்தனை பேர்? காதல் கல்யாணம் நடந்து ஆறு மாதத்தில் கைவிட்டுவிட்டு ஓடுபவர்கள் எத்தனை பேர்? இல்லையென்றால் விவாக ரத்து வழக்கு போடுபவர்கள் எத்தனை பேர?

இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், ஆணும் பெண்ணும் வளர்ந்த கலாசாரம் மற்றும் பொருளாதார சூழ்நிலை வித்தியாசங்கள்தான். இவைகள் வாழ்க்கையில் மிகவும் முக்கிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இளமை வேகத்தில் வெறும் 'பாலுணர்வை' காதல் என்று நினைத்து ஏமாந்து போகிறவர்கள்தான் அநேகர்.

இந்த வித்தியாசங்களையும் மீறி அந்தக் கல்யாணம் நிலைத்தாலும் அவர்களுக்கு ஒரு சமுதாய அந்தஸ்து கிடைப்பதில்லை. அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணும்போது ஏற்படும் பிரச்சினைகள் அநேகம். இதையெல்லாம் இளைஞர்கள் மனதில் கொண்டு அவர்கள் எதிர்கால வாழ்க்கையை வகுத்துக் கொள்ளவேண்டும்.
  
நன்றி: டாக்டர் P.கந்தசாமி PhD, ஓய்வுபெற்ற விவசாய விஞ்ஞானி, கோயம்புத்தூர், தமிழ்நாடு. Swamysmusings.blogspot.com


(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

7 கருத்துகள்:

Amalan Denmark சொன்னது…

atumay atumy.

கேumuthini Denmark சொன்னது…

மிகவும் அருமை.

vinothiny pathmanathan dk சொன்னது…

நாம் கதைப்பதற்கு எல்லாம் காரணம் தேட முற்பட்டால் தேடிக்கொண்டே இருக்க வேண்டியது தான் .இருந்தாலும் நல்ல முயற்சி .அதற்கான பதில் கத்தரிக்காய் விரைவில் வாடிவிடும் என்பதால் தான் அப்படி சொல்கிறார்கள் என்றால் கத்தரிக்காயை விட விரைவில் வாடி போகக் கூடிய மரக்கறி வகைகள் இல்லையா? நீங்கள் சொன்ன மாதிரி எதுகை மோனை தான் இதற்குக் காரணமாக இருக்கலாம் . எது எப்படி இருந்தாலும் ஆக்கம் சுவாரஸ்யமாக இருந்தது. பாராட்டுக்கள் .

இ.சொ.லிங்கதாசன்.,டென்மார்க். சொன்னது…

நாம் பேசுகின்ற மொழியில் உள்ள சிலேடைகள், உவமைகள், போன்றவற்றிற்கெல்லாம் காரணம் தேடிக் கொண்டிருக்கக் கூடாது என்ற உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன், ஆனால் பெரும்பாலான 'சொல்லடைகள்', உவமைகள், பழமொழிகள், போன்றவற்றிற்கு போதிய விளக்கம் இல்லாமலும், அர்த்தம் தெரியாமலும் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மைதானே? "இன்னும் 39 வருடங்களில் தமிழ்மொழி அழிந்துவிடும்" என்று வேறு பயமுறுத்துகிறார்கள். ஆங்காங்கே வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் 'செம்மொழிக்குத்' தொண்டு செய்வதே எனது நோக்கம்.எனது கட்டுரைகளில் இதைக் கண்டிருப்பீர்கள். உங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் நன்றி.

vinothiny pathmanathan dk சொன்னது…

உங்கள் பதிலுக்கு நன்றி தாசன். உங்கள் தமிழ் மீதான ஆர்வத்தை நிச்சயமாக உங்கள் எழுத்துக்களில் இருந்து அறிந்திருக்கின்றேன் .உங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள் உள்ளவரை தமிழுக்கு அழிவேது ? நன்றி

uthayan சொன்னது…

you have strated the wolk kid, wish to be poet for all, that time you will like be a marathan runner.

aotspr சொன்னது…

அருமையான அலசல்..........

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

கருத்துரையிடுக