வியாழன், செப்டம்பர் 29, 2011

கனவு காணும் வாழ்க்கை

ஆக்கம்: ஜோ மில்டன், சிங்கப்பூர்
2 மாதங்களுக்கு முன் சிங்கப்பூரில் பிரபலமான ஒரு பல்பொருள் வணிக வளாகத்திற்கு சென்று விட்டு, அதனோடு ஒட்டியிருக்கின்ற உணவகத்தில் நண்பரோடு காபி அருந்திக் கொண்டிருந்தேன். சுவாரஸ்யமான உரையாடலில் இருந்த போது, பக்கத்து இருக்கையில் இருந்து ஒருவர் "சார். S-Pass -ன்னா என்ன சார்?" என்று கேட்டார். 35-40 வயதிருக்கும். சோர்ந்து போயிருந்த முகம். சிங்கப்பூரைப் பொறுத்தவரை வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து பணி புரிவோருக்கு 4 விதமான அடையாள அட்டைகள் இருக்கின்றன .


1. Work Permit (கட்டிடத் தொழிலாளர் ,உணவகத்தில் வேலை செய்பவர் போன்ற நாள் கூலி மற்றும் குறைந்த சம்பளம் உள்ளவர்

2. S-Pass (1000-2500 டாலர் அடிப்படை சம்பளமுள்ள நடுத்தர வேலை செய்வோருக்கு)




3. Emloyement Pass (2500 டாலருக்கு மேல் அடிப்படை சம்பளமுள்ள புரபஷ்னல் வேலை செய்வோருக்கு)

4. Permenant Resident (நீண்ட நாள் வேலை செய்வோர் தங்களை நிரந்தர வாசிகளாக மாற்றிக்கொள்ளலாம்)

இதையே நான் அவரிடம் சொன்னேன். அவர் சொன்னார் "சார். நான் இஞ்சினீயரிங் படித்துள்ளேன். சென்னையில் 8 ஆண்டுகள் Production துறையில் அனுபவம் உண்டு. 2 மாதங்களுக்கு முன் S-Pass-ல் சிங்கப்பூர் வந்தேன். இப்போது இந்த வளாகத்தில் உள்ள கழிவறைகளை(Toilets) சுத்தம் செய்து விட்டு வந்து உட்கார்ந்திருக்கிறேன்". நான் ஆடிப்போய்விட்டேன். அவருடைய S-Pass அடையாள அட்டையை என்னிடம் காண்பித்தார். அதில் அவருடைய வேலை 'Mechine Technician' என்று போட்டிருந்தது .என்ன நடந்தது என கேட்டேன் .தான் அனுபவம் பெற்ற 'புரொடக்சன் வேலை' என்று தன்னை அழைத்து வந்ததாகவும், ஆனால் உடனடியாக அந்த வேலை காலியாக இல்லை, எனவே அதுவரை வேறு வேலைகள் கொடுப்பதாகவும் சொல்லி அவரை பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தியதாகவும் தெரிவித்தார். இப்படியே நாட்கள் கடத்தப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்து விட்டதாம். வணிக வளாகங்களில் ட்ராலிகளை சேகரிப்பது, கழிவறை சுத்தம் செய்வது போன்ற வேலைகள் செய்ய அவர் நிறுவனம் அனுப்பி வைப்பதாக கூறினார்.

பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது .மிகவும் சோர்ந்து காணப்பட்டார். ஊருக்கு திரும்பிப் போய்விடலாமா என நினைப்பதாக சொன்னார்.  இஞ்சினியரிங் வரை படித்த ஒருவர் எப்படி இவ்வளவு ஏமாந்தார் என்று என்னால் நம்ப முடியவில்லை. அவரிடம் நேரடியாகவே கேட்டு விட்டேன் "சார். நீங்க இஞ்சினியரிங் படித்ததில் ஒன்றும் பிரச்சனை இல்லையே?"..அவரோ "என்ன சார்..நான் படிக்காதவனா இருந்திருந்தா மகிழ்ச்சியோடு இந்த வேலைகளை செய்திருப்பேன் .இப்படி ஏமாற்றம் இருந்திருக்காது. இப்போது 8 வருடம் ப்ரொடக்சன் வேலை செய்து விட்டு பல கனவுகளோடு வந்து இங்கு இப்படி இருப்பது ரொம்ப வருத்தமாயிருக்கிறது" என்றார்.

"சரி என்ன செய்யப்போகிறீர்கள்?" என்று கேட்டேன். "என்னால் முடிந்த வரை இதே வேலைகளை செய்ய வேண்டியது தான் .அதற்குள் எனக்கு சொல்லப்பட்ட வேலை தரல்லிண்ணா வேற வழியில்லை..ஊருக்கு போக வேண்டியது தான்" என்றார் .நான் அவரிடம் "நீங்கள் வருமுன்னர் நன்கு விசாரித்து வந்திருக்க வேண்டும் .சரி அதை விடுங்கள் .இப்போதுள்ள சூழ்நிலையில் நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் .நீங்க சொன்ன மாதிரி அவர்கள் சொல்லப்பட்ட வேலை தருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் பல்லைக் கடித்துக் கொண்டு சிறிது காலம் ஓட்டி விடுங்கள் .அல்லது ஊருக்குத் தான் போகப்போகிறேன் என்று முடிவு செய்து விட்டால் ,வெறுமனே சென்று விடாதீர்கள் .அந்த நிறுவனத்தின் இந்த மோசடியைப் பற்றி 'மனித வள அமைச்சுக்கு' ஒரு புகார் எழுதிக் கொடுத்து விட்டு போங்கள் .அரசாங்கம் கண்டிப்பாக அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும் .அட்லீஸ்ட் இனிமேலாவது உங்களைப் போல பலரை அவர்கள் ஏமாற்றாமல் தடுத்த 'புண்ணியமாவது' உங்களுக்கு கிடைக்கும்" என்று சொன்னேன் .அவரும் ஆமோதித்து அப்படியே செய்வதாக சொன்னார்.

இந்த மனிதர் எத்தனை கனவுகளோடு இங்கே வந்திருப்பார் .விமானத்தில் பறந்து வரும் போது என்னவெல்லாம் கற்பனை செய்துகொண்டிருப்பார்? 8 ஆண்டுகள் 'ப்ரொடக்சன்' அனுபவம் பெற்றிருந்தாலும் சிங்கப்பூர் போல அதி தொழில் நுட்பம் நிறைந்த இடத்தில், தனக்கு மேலும் நுட்பமான வேலை கிடைத்தால் எப்படி சமாளிப்பது என்றெல்லாம் நினைத்திருக்க மாட்டாரா? இப்போது அவருக்கு கிடைத்தது 'கழிவறைகளை' சுத்தம் செய்யும் வேலை .அது ஒன்றும் தரக்குறைவான ,'இழிவான' வேலையல்ல .ஆனால் அதை ஏற்றுக்கொண்டு எதிர்பார்த்து வந்திருந்தால் பிரச்சனையில்லை .இப்போது அவர் குடும்பத்தினரிடம் கூட உண்மையை சொல்லியிருப்பாரா? தெரியவில்லை.

ஒரு பக்கம் பரிதாபமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் மேல் கோபமாகவும் இருக்கிறது .இவ்வளவு படித்தவர் இப்படி கண்ணை மூடிக்கொண்டு வரலாமா? படிக்காத பாமர மக்கள் இடைத்தரகர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை கட்டி எதாவது ஒரு வேலைக்கு சென்று விட வேண்டும் என்று எதையும் விசாரிக்காமல் இங்கு வந்து கஷ்டப்படுவது வாடிக்கை தான் .ஆனால் படித்தவர்களும் அப்படியே இருந்தால் என்ன செய்வது ?தான் பணிபுரியப்போகும் நிறுவனத்தைப் பற்றி இங்கு வரு முன்னரே விசாரித்து அறிந்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கிறது .இவ்வளவு படித்த ஒருவருக்கு யார் மூலமாகவோ ,சிங்கையில் பணிபுரியும் ஒருவரிடம் அந்த நிறுவன விபரங்களை கொடுத்து ,அவை உண்மை தானா ,உண்மையிலேயே அவருக்கு குறிப்பிடப்பட்டுள்ள வேலை கொடுக்கும் நிலையிலுள்ள,அது சம்பந்தமான பணிகள் நடக்கும் நிறுவனம் தானா என்று விசாரித்து அறிந்து கொள்ளலாமே?இங்கிருக்கின்ற நண்பர்கள்,அல்லது நண்பர்களின் நண்பர்கள் யாராவது ஒருவர் குறைந்த பட்சம் இந்த உதவி கூடவா செய்யாமல் போய் விடுவார்கள்?

இங்கே ஒரு இந்திய தூதரகம் இருக்கிறது என்று தான் பெயர்.அவர்கள் இந்தியாவிலிருந்து இங்கு வந்து பணிபுரியும் தொழிலாளத் தோழர்களின் பிரச்சனைகளில் எந்த அக்கரையும் காட்டியதாக தெரியவில்லை .Work Permit-ல் இங்கு வரும் இந்திய தொழிலாளர்களை விட அதே வேலை செய்யும் மற்ற நாட்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகம் .பங்களாதேஷ் போன்ற நாடுகளின் தூதரகங்கள் கூட தம் நாட்டு தொழிலாளர்களின் பிரச்சனைகளில் அக்கரையோடு நடந்து கொள்வதாக கேள்விப்பட்டேன் .ஆனால் நம் நாட்டு தூதரகத்துக்கு ஒரே வேலை, பிறப்பு சான்றிதழ் 40 டாலர் ,திருமண சான்றிதழ் 40 டாலர் இப்படி வித விதமாக சான்றிதழ்களுக்கு பணம் வசூலிக்கும் ஒரே பணி .இது தூதரகமா இல்லை போஸ்ட் ஆபீசா தெரியவில்லை.

சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு உதவி கேட்டு என்னை அணுகினார் .உள்ளூர் தொண்டு நிறுவனம் ஒன்று வெளிநாட்டு தொழிலாளர்கள் அடிப்படை ஆங்கிலம் ,எளிய உரையாடல்கள் ,பணியிடத்தில் அணுகு முறைகள், சிங்கை நடைமுறைகள் போன்ற பயன் மிக்கவை பற்றி அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த இருப்பதாக ,அதற்கான பாடத்தை தமிழ்ப் படுத்தித்தர வேண்டும் என்று கேட்டார்.நானும் செய்து கொடுத்தேன் .இதில் ஈடுபட்டிருக்கிறவர்கள் அத்தனை பேரும் சீனர்கள் .நமது தொழிலாளர்கள் மீது இந்த சீனர்களுக்கு உள்ள அக்கரையாவது இங்குள்ள தூதரகத்துக்கு இருக்கிறதா ?சுதந்திர தினத்தன்று கொடியேற்றி இனிப்பு வழங்கி விட்டால் ஒரு வருட தேச சேவை முடிந்து விட்டது போலும்.

சரி. நாம் தொடங்கிய விடயத்துக்கு வருவோம். பொதுவாகவே நம் மக்களுக்கு ஒரு மனநிலை இருக்கிறது .நேரடியாக நிறுவனங்களை அணுகியோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலமோ அல்லாமல் ,ஒரு தனி இடைத்தரகர் மூலம் இப்படி வேலைக்கு வருபவர்கள் சிங்கப்பூர் வந்து விட்டால் போதும் என்ற ஒரே கண்ணோட்டத்தோடு வேறு சிக்கல்களைப் பற்றி எண்ணுவது கூட கிடையாது. அப்படி எண்ணினால் இங்கு வருவது தடைபட்டு விடுமோ என்ற பயம். தனக்கு தெரிந்தவர்களிடம் கூட விவரங்கள் சொல்வதில்லை .யாராவது எதையாவது சொல்லி தாங்கள் போவதை தடுத்து மனம் மாற வைத்து விடுவார்களோ என்ற அச்சம், கண்ணை  மூடிக்கொண்டு இங்கு வந்து சேருகிறார்கள்.இதை படிக்காத 'பாமரர்கள்' விபரமின்றி செய்கிறார்கள் என்பதை பொறுத்துக்கொள்ளலாம் .ஆனால் ஓரளவு 'படித்தவர்களே' இப்படி நடந்து கொண்டால் எங்கே போய் முட்டிக்கொள்வது?

இனிமேலாவது, குறைந்த பட்சம் படித்தவர்கள் சிங்கை போன்ற நாடுகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் வேலைக்கு வருமுன் ,இங்கிருக்கும் யார் மூலமாவது கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்கள் ஓரளவு உண்மை தானா என்று சற்று விசாரித்து விட்டு வரவும் .உதவி செய்ய என்னைப் போன்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

2 கருத்துகள்:

Arun DK சொன்னது…

nall manitharkallum innum irukerarkal. happy.

pinto சொன்னது…

thank you mr.milton this will help lot of peoples

கருத்துரையிடுக