சனி, செப்டம்பர் 13, 2014

ரெகார்ட் டான்ஸ் பார்த்த கோபால்

திருவிழாக்களில் “ரெக்கார்ட்” டான்ஸ் ஆட உயர் நீதிமன்றம்  தடைகோபால் “கௌரவமாக” கரகாட்டம் என்று சொன்னாலும் இது ரெகார்ட் டான்ஸ் பார்த்த அனுபவம்தான் என்று நினைக்கிறேன். ஆட்டக்காரிக்கு அவர் பரிசு கொடுத்ததும், அதை லவுட்ஸ்பீக்கர் போட்டு சொன்ன நண்பனும் அதற்கு அவருக்கு கிடைத்த பரிசும் பிரமாதமாக இருக்கிறது. மனிதருக்கு நல்ல சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்!
என் காலேஜ் வாழ்க்கையில் எனக்கு இருக்கும் குறைகளில் ரெகார்ட் டான்ஸ் பார்க்காமல் விட்டுவிட்டது ஒன்று (நண்பர்களுடன் ஜம்பு திரைப்படம் பார்க்காமல் போனது இன்னொன்று) – படிக்கவில்லையே என்றெல்லாம் பெரிய குறை இல்லை. கோபாலின் அனுபவத்தை படித்து மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்! ஓவர் டு கோபால்!
ஆக்கம்: ஈஷ்வர் கோபால்
திருச்சி சின்னப்பொண்ணுக்கு குத்திவிட்ட ஐந்து ரூபாய்
ஊல் திருவிழாக்கள் வந்துவிட்டால் மனது குதூகலிக்கும். இந்த திருவிழாக்களில் கரகாட்டம் ஓர் அழகுதான். டப்பாங்குத்து பாட்டும் உருவி மேளமும், பஞ்சுமிட்டாயும், ஊதுகுழலும், பலூனும், மாங்காய் சிதறல்களும், சேட் ஐஸும், சீனிமிட்டாயும், கோலி கலர் சோடாவும் புகுந்து விளையாடும். முப்படாதி அம்மன் என்ற அம்மனின் இத்திருவிழா பத்து நாள் நடக்கும். அம்மனுக்கு பிரமாதமாக அலங்காரம் எல்லாம் செய்து, பின்னி விட்டு, குஞ்சலம் கட்டிவிட்டு, ஒரு கையில் குடத்தையும், ஒரு கையில் வெற்றிலையையும் வைத்து அழகில் மெருகூட்டியிருப்பார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு கட்டளைகள் என்ற செலவு முறை வீதம் அம்மனுக்கு பூஜைகளும் சுவாமி புறப்பாடும் நடக்கும். ஒரு நாளில் எல்லோரும் சேர்ந்தும் பண்ணுவார்கள். ஒருவரை விட நாம் அம்மனுக்கு நன்றாக பண்ணவேண்டும் என்ற உணர்வு இருக்குமேயொழிய வேறு கசமுசா எதுவும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை.
ரெக்கார்ட் டான்ஸ்  record dance tamil story தமிழ் சிறுகதைஇதில் கரகாட்டம் ஆடும் பெண்ணுக்கு முகத்தில் பாண்ட்ஸ் பௌடரெல்லாம் பூசி, சாயத்தில் தோய்த்து, மூன்று புள்ளிகளை இரண்டு கண்களுக்கு பக்கவாட்டில் பொட்டாக வைத்து, புருவத்தை சோம்பல் நெளிப்பது போல் வரைந்து, நவீனமாக ஜிகினா சட்டையும், அரைப் பாவாடையும் போட்டு ஆடவிடுவார்கள். சாமி புறப்பாடாகி ஊருக்குள் ஒவ்வொரு மூன்று, மூன்று வீடு விட்டு தெருவில் ஒரு 10 நிமிடம் ஆடப்படும் பாட்டு கூடுமான வரை சினிமா பாட்டாகவே இருக்கும். ஆடும் கரகாட்டக்காரிக்கும், உருவி மேளம் வாசிப்பவனுக்கும், தில்லானா போல பலத்த போட்டி நிகழும். இதில் கராகாட்டக் குடத்தை தூக்குவதற்க்கு ஒரு கூட்டம் கூடவே போய்கொண்டிருக்கும் (இனிப்பை தூக்க ஈப்படை?). கரகாட்டக்குடம் ஒரு பித்தளையில் செய்யப்பட்டு, மேலிருந்து நடுப்பகுதிவரை ஒரு ரவிக்கைத்துணி மாதிரி போட்டு, முகப்பில் பச்சைக்கிளியை பொருத்தியிருப்பார்கள். அதில் உள்ளே என்னதான் இருக்கிறதோ என்ற உலகப் பிரச்சனை மண்டையை குடையும்.
இந்த சாமி புறப்பாடு ஆவதற்கு முன் சில பல ஆபாசங்களுடன், கோவிலிலிருந்து தள்ளி, ஒரு பெரிய திடலில் மேடை போட்டு பாட்டும், கூத்தும் ஒரு 3-4 மணி நேரம் நடக்கும். மேடையை மிகவும் உயரத்தில் போட்டிருப்பார்கள், கூட்டம் அலை மோதும், கலர் கலராக குழாய் விளக்குகள் ஊதா, நீல, சிவப்பு நிறத்தால் பட்டையை கிளப்பும். குழாய் ஒலிபெருக்கியை கட்டியிருப்பார்கள். அதனால் எங்கோ நடக்கும் பாட்டும், கூச்சலும், தெளிவாக ஒரு கிலோமீட்டார் தொலைவில் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சற்று காற்று வாங்கிக் கொண்டிருக்கும் பெரியவர்களுக்கு தெளிவாகக் கேட்கும். 

அப்போது மயக்கமாக :-

கூட்டத்திலே கரகாட்டம், சின்னப்பொண்ணுமேல் நாட்டம்!
எல்லோருக்கும் அவ மேல் நோட்டம்
அவ சிரிச்சாலே சிரிக்கும் கூட்டம்
வேகமாக போடறாளய்யா குத்தாட்டம்!

அவ குலுங்கினா மனம் போடும் ஆட்டம்
நெளிந்தால் மனது போடுதே காமக் களியாட்டம்
அவளின் நடையோ சிலுசிலுக்கும் கொய்யாத் தோட்டம்
பெருசுக்கும் சிறுசுக்கும் அவ மேல நாட்டம்

கரகத்தின் கிளியாக என்னை எண்ணு
உடைக்காதே என் மனதை கண்ணு
மாமன் கலியாணத்தில் நீதாண்டி பொண்ணு
வாரியணைக்க வாடி என் திருச்சி சின்னப் பொண்ணு!


இப்படி தூள்கிளப்பும் கிளுகிளு பாட்டுக்களுடன் தொடங்கும். இது போன்ற நடனங்கள் அருவருக்கத்தக்கவை என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளதால், இதை பார்க்க வீட்டில் அனுமதி கிடையாது. 9 மணிக்கு நடு ஜாமமாகவும், 10-11 மணி இரவில் பேயே வெளியில் வந்து காற்று வாங்கும் நேரமாகவும் கருதப்படும் ஊரில், இது போன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு அனுமதிப்பதில்லை. வீட்டில் கேட்கவே முடியாது. கேட்டால் அடிதான். முக்கால்வாசி நாட்கள் திண்ணையில்தான் தூக்கம் என்றாலும், எல்லோரையும் ஏமாற்றிவிட்டு போகவோ பயம் வேறு. ஆபாசம் எது? நல்லவை எது? என்று பிரித்துப் பார்க்க முடியாத வயதில், எப்படியாவது ஒரு முறை இவற்றை பார்க்கவேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆர்வம் ஒரு புறம், அதே நேரம் மாட்டிக் கொள்ளவும் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு ஒரு புறம். அடி வாங்கி வாங்கி ஏற்கனவே என் முதுகு – “முடியல” என்றது. இப்படிப்பட்ட முரண்பாட்டு குழப்பங்களில் என்ன செய்யலாம் என்று ஐன்ஸ்டீன் போல் விடையை தேடிய போது, கிடைத்தது ஒரு ஒளி வட்டம்.
அன்று ஏதோ பெரிதாய் ஒரு தப்பை வீட்டில் பண்ண, அப்பா எப்போதும் போல், அடித்து, துவைத்து, கோட் ஸ்டாண்டில் மாட்டுவதற்கு பதிலாக, திண்ணையில் தூக்கிப் போட்டு “இன்று இரவு உனக்கு சாப்பாடும் கிடையாது” என்று கதவை தாழ்ப்பாள் போட்டுச் சென்றுவிட்டார். இப்போதல்லாம் இதைப் போல் ஒரு பையனை அடித்தால், வீட்டை விட்டு ஓடி விடுகிறார்கள் என்று, வீட்டில் உள்ளவர்களும், மன நோய் மருத்தவரும் டிவியில், ஒலிபெருக்கியில், பத்திரிகையில் கூவுகிறார்கள். இதன் கணக்குப்படி பார்த்தால், நான் ஒரு 1000 முறையாவது ஓடியிருக்கவேண்டும். பாயில் படுத்துக் கொண்டு, இரண்டு நட்சத்திரத்தை தொலைநோக்கியாகக் கொண்டு இருபதாயிரம் நட்சத்திரத்தை வானில் எண்ணத் தொடங்கிய போது, பொறி போல் கிடைத்தது ஒரு புது எண்ணம். கொஞ்சம் நேரம் அழுவது போல் பாவ்லா காட்டிவிட்டு, கம்பி வழியே எட்டிப்பார்த்தேன் – எல்லோரும் விளக்கை அணைத்து விட்டு நித்திரைக் குதிரையை எடுத்துக் கொண்டு “கிண்டி” போய்விட்டிருந்தார்கள், எடுத்தேன் ஓட்டம் – எங்கு? ஊரை விட்டு ஓடவா? – இல்லை, அந்த நடனத்தை பார்க்கத்தான்.
அம்மாவிடம் கெஞ்சி பல முறை வாங்கி சேர்த்து வைத்த ஐந்து ரூபாய் வேறு இருக்கும் தைரி்யத்தில் – இருட்டையும், காற்றையும் வெட்டிச் சாய்த்து புகுந்தோடினேன். திடலில் முகப்பில் போகும்போது நிரம்பி வழிந்த கூட்டமும், கூச்சலும், அதனூடே மேடையில் குட்டைப் பாவாடையில் ஆடுவதற்கு தயாராக “மேலிருந்து கீழாக, இடமிருந்து வலமாக” இலங்கை வானொலியின் குறுக்கெழுத்துப் போட்டி வடிவத்தில் நடந்து கொண்டிருந்தாள் திருச்சி சின்னப் பொண்ணு. மேளகாரரும், நாயனகர்த்தாவும் அவளை எப்படி பெண்டு நிமித்துவது என்று வியூகம் வகுத்துக் கொண்டிருந்தார்கள். அக்கால கட்டங்களில் கரகாட்டத்தில் பெயர் பெற்று விளங்கியவளான இவர்களுக்கு வரவேற்பு அதிகம் என்று கூறக் கேள்வி. இரண்டு மூன்று ஆட்டம் பாட்டம் முடிந்தபோது நிகழ்ச்சி சூடு பிடித்திருந்தது. அதன் சிறிய இடைவெளியில் யார் யார் அவளுக்கு பணம் சன்மானமாக கொடுத்தார்களோ, ஒரு பென்சிலில் எழுதி ஒலிவாங்கியில் அறிவித்து கௌரவப்படுத்திக் கொண்டிருந்தான் ஒரு மாமேதை. நிகழ்ச்சியைப் பார்க்க இலவசம் என்றாலும், தன் பெயரும், விலாசமும் குழாய் ஒலிபெருக்கியில் வருதென்றால் சும்மாவா? எல்லோரும் முண்டியடித்து ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று கொடுத்து அறிவிப்பின் மூலம் ஜன்மத்தை கடைத்தேற்றிக் கொண்டிருந்தார்கள். அப்பா சற்று முன் கொடுத்த ‘பூசையும், பசியும்’ பஞ்சாக பறந்து போயிருந்தது.
அடுத்ததாக நிகழ்ச்சியில் மூன்று கலர் குழாய் விளக்கை கீழேயிருந்து மூன்றடியில் கொஞ்சம் இடைவெளி விட்டு ‘ப’ எழுத்தை தலைகீழாக போட்டதுபோல் வைத்திருந்தார்கள். அதில் இவள் ஆடிக்கொண்டே அதை உடைக்காத வண்ணம் அடியில் புகுந்து வெளிவந்தபோது கரகோஷம் விண்ணைப் பிளந்தது. பின் குழாய் விளக்குகளை உடைத்து அதன் மேல் நடனம் ஆடிய போது காலில் ரத்தம் வந்தது – அப்படியே எங்கள் கண்களிலும் வந்தது.
என்னுடைய பள்ளி நண்பன் பால்பாண்டி என்பவன்தான் பணம் வரவு செய்து, ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து கொண்டிருந்தான். அவனை நெருங்கி, கரகாட்டம் ஆடும் நங்கையை பக்கத்தில் பார்க்கவேண்டும் என்றேன். அப்போது அவனோ ஐந்து ரூபாய் இருந்தால் அவள் ரவிக்கையில், அதாவது தோள்பட்டையின் மேல் ஒரு ஊக்குப் பின்னை வைத்து குத்தி கைதட்டல் பெறலாம் என்றான். சிவபெருமானை அடித்துக் கொண்டு போக வேண்டுமென்று இறுமாப்பு கொண்ட கங்கை வானிலிருந்து விழுந்தது போல், உணர்ச்சிப் பெருக்கில் சரியென்று கூறி விலாசம் கூறிவிட்டு, அவளிடம் ஐந்து ரூபாயை குத்தி கைதட்டல் பெற்று மேடையிலிருந்து இறங்கினேன். அப்போது கூடியிருந்த சிலரிடமிருந்து – “ஏதோ சாமி பையனாம்ல” என்று கூறுவதைக் கேட்டேன், திடீரென பயமும் ஆனந்தமும் தொற்றிக்கொள்ள, “அய்யய்யோ – கொஞ்சம் அதிகமாப் பண்ணிட்டோமோ?” என்று எண்ணி அங்கிருந்து சீக்கிரம் வந்து திண்ணையில் படுக்க எண்ணி நகர்ந்தேன். திரும்பும்போது அவனிடம், ஒலி பெருக்கியில் ஏதும் என் பெயரும், விலாசமும் கூறிவிடாதே என்று எச்சரித்து விட்டு, இரண்டு தெரு தாண்டி, சந்தில் சரேலென புகுந்து எங்கள் தெருவின் முனையை தொட்டபோது – ஒலிபெருக்கியில், என் பெயர், விலாசம், இன்னார் இன்னாரின் புதல்வன் என்று எங்கப்பா பெயரையும் சேர்த்ததோடு மட்டுமல்லாது, அவர் வேலை பார்க்கும் நிறுவனப் பெயரையும் சேர்த்து அடைமொழியாக கூறி, தெளிவாக நிதானமாக, கௌரவித்துக் கொண்டிருந்தான் அந்த மோர்பாண்டி. அடேய் பால்பாண்டி எனக்கு பால் ஊத்திட்டேயேடா என்று கருவிக்கொண்டு என் வீட்டருகே வந்தால் …… அங்கு அப்பா, பாஞ்சாலர்களை வதம் செய்யப்போகும் அஸ்வத்தாமனைப் போல் நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் 'அம்பு மாமா', 'பெரியப்பா' என்று துணைத் தூண்கள் வேறு. நான் போகும் போது எந்தச் சுவடும் இல்லாமலிருந்தவர்கள், எப்படிக் கூடினார்கள்? “எங்கடா போய்ட்டு வரே?” என்று அப்பா கேட்டபோது அவர் முகத்தில், அந்த இரவிலும் பத்து சிவப்பு சூரியன்கள் விஷ்ணுசக்கரம் சுற்றியது. “வந்து, முடுக்கில் போய் ஒண்ணுக்கு…போகப் போனேன்” என்று சமாளித்து கூறியபோது உண்மையில் அங்கு வராதது இங்கு வந்தது. பாண்டி வைத்த ஆப்பு ஒலிபெருக்கியில் ஆதாரமாக எனக்கு முன்னாலேயே வந்திருக்க, வேறு என்ன வேண்டும்? உரியடியில் கண்ணைக் கட்டிக் கொண்டு அடிக்கும் நபராக என் தந்தையும், உரியில் மாட்டிய தேங்காயாக மேலும் கீழும் நானும், “விடாதே, அடி, இங்கே, அங்கே” என்று பக்கவாத்தியங்களும் சேர்ந்து நீலாம்பரியில் ஆரம்பித்து பூபாளத்தில் ஒரு வழியாய் முடிந்தபோது சூரியன் உதயமாகியிருந்தான்.
மறுநாள் பள்ளிக்கூடத்தில் என்னை புழுவாகப்பார்த்தார்கள். என் வாத்தியார் “ஏலே, நாங்கல்லாம் செய்யாத சாகசத்தை இப்போவே செய்திட்டியேல” என்றபோது பருவ மங்கை போல் தலைகுனிந்து அமைதி காத்தேன். பால்பாண்டியின் உரிய பங்கை கொடுப்பதற்கு அவனை தேடினேன் விருமாண்டியாக, அவன் பள்ளிக்கு வரவில்லை. அப்போது ஒருவன், மெதுவாக என் காதில், “டேய், அடுத்த வர்சம் இதை விட பிரமாதமாக மதுரையிலிருந்து புதிதாக கரகாட்ட கோஷ்டி கூட்டியாரப் போறாவளாம்” என்று கசிந்தான். என் மனம் அடுத்த உரியடிக்கு தயாரானது. 
நன்றி:koottanchoru.wordpress.com

2 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

ஜோர், வெகு ஜோர்.

Unknown சொன்னது…

விவாதக்கலை வலைப்பூவில் தினம் ஒரு விவாதம் - வாதமாக எடுத்துக்கொள்ளப்படும். நண்பர்கள் & அன்பர்கள் தங்களின் வாதத்தை முன்வைக்கலாம்..
http://vivadhakalai.blogspot.com/

கருத்துரையிடுக