திங்கள், அக்டோபர் 27, 2014

ஐரோப்பிய நேர மாற்றம் : இயற்கையை கட்டுப்படுத்தும் முதலாளித்துவம்

ஆக்கம்: கலையரசன், நெதர்லாந்து.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில், ஒவ்வொரு வருடமும், மார்ச் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை/ஞாயிற்றுக்கிழமை (சரியாக ஞாயிறு அதிகாலை இரண்டு மணிக்கு) அன்று, "கோடை கால நேரம்" மாற்றுவார்கள். அதன் பிரகாரம், மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 23 மணித்தியாலங்களை கொண்டிருக்கும். இதனால், ஐரோப்பாவிற்கும், இந்தியா, இலங்கைக்குமான நேர வித்தியாசம் மூன்றரை மணித்தியாலமாகும். 

அதே மாதிரி ஒக்டோபர் மாதத்தில் வரும் கடைசி வார இறுதி நாளன்று, குளிர்கால நேரம் மாற்றப்படும். அன்று வரும் ஞாயிற்றுக்கிழமை 25 மணிநேரத்தைக் கொண்டிருக்கும். அதனால், இந்தியா, இலங்கைக்கான நேர வித்தியாசம் நான்கரை மணித்தியாலமாக அதிகரிக்கும். (மேற்கு)ஐரோப்பாவைத் தவிர, அமெரிக்கா, கனடாவிலும் நேர மாற்றம் அமுல் படுத்தப் படுகின்றது. இந்த நேர மாற்றத்தை Daylight Saving Time (DTS)  என்று குறிப்பிடுவார்கள்.

ஐரோப்பாவில் வாழும் மக்கள் பலருக்கு, எதற்காக இந்த நேர மாற்றம் என்ற காரணம் தெரியாது. பலரும் இதனை ஒரு பாரம்பரிய கலாச்சாரம் போன்று பின்பற்றி வருகின்றனர். "கோடை காலத்தில், அதிக சூரிய ஒளி கிடைப்பதால், எரிபொருள் மிச்சம் பிடிக்கலாம்" என்று இதற்குக் காரணம் சொல்லப் படுகின்றது. "கோடை காலத்தில் பறிக்கப் படும் ஒரு மணித்தியாலத்தை, குளிர்காலத்தில் திருப்பித் தருகிறார்கள்" என்று பொது மக்கள் நினைத்துக் கொள்கின்றனர்.

உண்மையில் இந்த நேர மாற்றம், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் அறிமுகப் படுத்தப் பட்டது. அதுவும், "முதலாளித்துவ நாடுகள்" என்று அழைக்கப் படும், மேற்கு ஐரோப்பாவில் மட்டுமே அமுலுக்கு வந்தது. காலப்போக்கில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அந்த நடைமுறையை பின்பற்றத் தொடங்கின. எழுபதுகளில் ஏற்பட்ட, எண்ணைத் தட்டுப்பாடு காரணமாக, எல்லா மேற்கத்திய நாடுகளிலும் பின்பற்றப் பட்டது.
நேர மாற்றத்தை கொண்டு வருவதற்கு, இயற்கை, காலநிலை, எரிபொருள் சேமிப்பு என்று, பலரும் நம்பக் கூடிய காரணங்கள் சொல்லப் பட்டன. ஆனால், ஐரோப்பாவுடன் ஒரே பூகோள அமைவிடத்தை, ஒரே மாதிரியான காலநிலையை கொண்டுள்ள முன்னாள் சோவியத் யூனியனில் அந்தப் பழக்கம் இருக்கவில்லை. இன்றைக்கும் ரஷ்யா, அதனோடு சேர்ந்த நாடுகளில் வாழும் மக்களுக்கு, கோடை கால நேர மாற்றம் பற்றி எதுவும் தெரியாது.

இந்த நேர மாற்றம் குறித்து, பல ஐரோப்பிய மக்கள் மத்தியில் குழப்பமும், சந்தேகமும் காணப் படுகின்றது. பொதுவாக விவசாயிகளுக்கு இதனால் எந்தப் பிரயோசனமும் கிடையாது. ஏனென்றால், மிருகங்களும், தாவரங்களும் தமக்கென்று ஒரு நேரத்தை வைத்திருக்கின்றன. மாடு தனது நேரத்திற்கு தான் பால் தரும். செடிகள் தனது நேரத்திற்கு தான் பூக்கும்.

குறிப்பாக, எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே, இந்த நேர மாற்றத்தால் நன்மை அடைந்து வருகின்றன. ஏனெனில், ஐரோப்பாவில் குளிர் காலம் என்பது, நீண்ட இரவுகளைக் கொண்டது. பெரும்பாலான நாடுகளில், மாலை நான்கு மணிக்கே இருண்டு விடும். மீண்டும் சூரிய வெளிச்சம் வருவதற்கு காலை எட்டு மணி ஆகும். அதே நேரம், குளிரும் அதிகமாக இருக்கும். ஆகையினால், மின் விளக்குகள் அதிக நேரம் எரிய விடப் படும். வெப்பமூட்டிகளும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப் படும்.
கோடை காலம் அதற்கு நேர் மாறானது. அதி காலை ஐந்து மணிக்கே சூரிய வெளிச்சம் கண்ணைப் பறிக்கும். இருட்டு வருவதற்கு, சில நேரம் இரவு பத்து மணி ஆகும். அதே நேரம், வெக்கையாக இருப்பதால், வீட்டிற்கு செயற்கை வெப்பம் உண்டாக்க வேண்டிய அவசியம் இல்லை.

எரிவாயு, மின்சாரம் விநியோகிக்கும் நிறுவனங்களைப் பொறுத்த வரையில், குளிர்காலம் என்பது அதிகளவு இலாபம் ஈட்டக் கூடிய பொற்காலம் ஆகும். இதனால், குளிர்காலத்தில் ஒரு மணித்தியாலத்தை கூட்டுவதன் மூலம், இலாபத்தையும் பன்மடங்கு அதிகரிக்க முடியும். அநேகமாக, இது ஒரு பகற்கொள்ளை தான். அதனால் தான், இந்த நேர மாற்றம் முதலாளித்துவ நாடுகளில் மட்டுமே நடைமுறைப் படுத்தப் படுகின்றது.

மேலதிக தகவல்களுக்கு:
Daylight Svaing Time (DTS) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக